ஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை

எனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.

சிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.
ஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.

எங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.
அருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.

ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.

ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு ஊர் முழுதும் இசை நிகழ்சி கேட்கும் வசதி ஏற்படுத்தப்பட்ட போதிலும் மேடையின் முன்னால் இருந்து அதை இரசிப்பதில் இருந்த சுகம் இன்றும் விலகவில்லை.

திருவிழா முடிந்து வீடு போய் பனங்காய் பாத்தியின் மீது ஏறி நின்று பனங்கிழங்கை ஒலிவாங்கியாய் எண்ணி நான்; செய்த அறிவிப்பு நினைவுகள் இன்றும் நிலைத்திருக்கின்றன.

எனது வாழ்கையை தீர்மானிக்கப்போவது அறிவிப்புத் துறை தான் என்பதறியாத பருவத்தில் எனக்குள் தோன்றிய காதல் அது.

ஏப்படியாவது ஒரு முறை ஒலிவாங்கியை ஸ்பரிசித்து அதில் பேசிவிட வேண்டும் என்ற ஆசை திருவிழாவிற்கு திருவிழா வளாந்து கொண்டே இருந்தது..ஆனாலும் என்னை நம்பி ஒலிவாங்கியை துடைத்து பெட்டியில் வைக்கும் வேலையைக் கூட எவரும் தரவில்லை.

நாட்கள் வருடங்கள் கடந்து நான் 13 வயதை அடையும் போது தான் எதிர்பார கணப்பொழுதொன்றில் எனக்கு ஒலிவாங்கியில் அறிவிப்புச் செய்யும் அந்த வாய்ப்பு கிடைத்ததது ஆனால் அது நீங்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு ஒலிபரப்பு அனுபவம்…

பொறுத்திருங்கள் தொடர்ந்து பேசுவேன் ஒலிவாங்கிக் காதலும் நிஜக் காதலும் சந்தித்த அழகான நாட்கள் வரை எனது பயணத்தின் அனுபவங்களை தொடர்ந்து எழுதுவேன்

Comments

சூரியனில் பணியாற்றிய ரமணன் நீங்கள் தானா..?

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...