நான் .. ஊடகம் .... இன்னும் சில...



இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திருந்தேன் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றேன்.

வாழ்கையின் ஒவ்வொரு படிகளையும் மிகுந்த சிரமங்களுடனேயே நான் ஏறிக் கடந்திருக்கின்றேன்.ஊடகமல்லாத வேறு துறையை தேர்ந்திருந்தால் சில வேளைகளில் சிரமமற்ற வாழ்வு வாய்திருக்குமோ என்றும் நான் எண்ணியதில்லை.

என்னைப் பொறுத்தவரையில் ஊடகவியல் என்பது ஒரு தவம் .வெறுமனே ஊடகம் வாயிலாக பிரபல்யம் பெறுவது தான் இலக்காக இருந்திருந்தால் எங்காவது ஒர் இடத்தில் குட்டையாக தேங்கியிருப்பேன். ஊடகத்துறையின் பல்வேறு பரிமாணங்களையும் தேடியறியும் ஆர்வத்தில் அலைந்துகொண்டிருப்பவனாகவே என்னை நான் காண்கின்றேன். இந்த பயணம் தேடல்கள் நிறைந்தது புதிது புதிதாய் விடயங்களை அறிந்து என்னை புதுப்பிக்க இது உதவியாய் இருக்கின்றது.

சமகால அரசியல் ,ஊடகத்துறையின் புதிய முயற்சிகள், சமூக ஊடகப் போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற விடயப்பரப்புகள் எனது கவன ஈர்பான்கள், இவை தொடர்பில் தேடிக்கற்பதில் வாசிப்பதில் அதிக அக்கறை கொண்டவன்.

99ம் அண்டு சூரியனில் பகுதி நேர ஒலிபரப்பாளனாய் ஆரம்பித்த எனது உடகப் பயணம் பின்னர் அங்கு நிரந்தர ஒலிபரப்பாளன் நிலை வரை உயர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் எனக்கு அடையான்தை ஏற்படுத்தி தந்த நேற்றைய காற்று இன்றும் எனது நேசத்திறக்குரியது.

அதேகாலத்தில் செய்திப்பிரிவினருடன் எனது நெருக்கம் அதிகரிக்கவும் ஒலிப்பரப்பு ஊடகவியலாளன் என்ற நிலை குறித்த அக்கறை என்னுள் அதிகரித்தது அதன் பலனாக சூரியன் செய்திப்பிரிவின் "சூரியப் பார்வைகள்" என்ற வாராந்த சஞ்சிகையினை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து அதன் ஊடாகவே எனது ஊடகப் பயணம் வேறு பரிமாணத்தை அடைந்தது. வெறுமனே ஒலிவாங்கிக்கு முன்னால் இருந்து பாடல்களை ஒலிபரப்பி கதை சொல்வதன் மீதான ஆர்வம் குறைவடைந்து வாளொலி ஊடகம் மூலமாக மக்களுக்கு பயன் தரும் வைகயிலான் செய்திப் பரிமாற்றத்தை நவீன முறையில் மேற்கொள்வது குறித்து அதிகம் கவனம் செலத்தினேன்.

2006ம் ஆண்டு நண்பர் வியாசாவின் அறிமுகத்தினால் இன்ரநியூஸ் எனும் அமெரிக்காவை தளமாக கொண்டியங்கிய ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சொல்லப்பட்டாத மக்களின் கதைகளை பேசும் நிகழ்சியினை தாரித்து வழங்கியதோடு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஊடகங்களில் நவீன தொழில் நுட்ப பயன்பாடு குறித்த பயிற்சிகளையும் வழங்கினோம்.

பின்னர் மீண்டும் வாழ்வோம் என்ற பெயரிலான திட்டம் ஆரம்பிக்கப்பட்டு. உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பற்றிய தகவல்களை பரிமாறும் ​நோக்கில் சுமார் இரண்டு வருடங்களாக வானொலி பத்திரிகை இணையம் என வெவ்வேறு ஊடகப் பரப்புகளில் பயணம் செய்யது. இந்த திட்டத்தின் செய்திப் பணிப்பாளராக நான் பணியாற்றியமை வாழ்வின் மறக்க முடியாத தருணம். எங்கள் மக்களின் வாழ்வின் அவலங்களை அவர்களுக்கான மனிதாபிமான தேவைகளைனிள் அவசியங்களை அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உதவி வழங்குனர்களிக்கம் எடுத்துச் சொல்வதே அந்த நிகழ்சியின் பிராதான நோக்கம். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலலேயே மனிதாபிமான செய்தியிடல் நிலவியது. ஒரு ஊடகப் போராளியாய் எனது அணியுடன் நான் மேற்கொண்ட அந்த பயணம் உண்மையில் எனக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் ஊடகம் தொடர்பான பார்வைப் பரப்பயைும் விசாலித்துள்ளது.

மனிதாபிமான செய்தியிடல் என்பது இங்கு பெரிதும் கவனம் பெறாத பிரிவாகவே காணப்படுகின்றமை கவலைக்குரியது. எனது கலாநிதிப் படத்திற்கான ஆய்வாக நான் எடுத்துக்கொள்ள எண்ணியுள்ள விடயங்களில் இது முதலிடம் பெறுவதற்கு காரணமும் அதுவே.

என்னைப் பற்றிய இந்த பகிர்வில் இதனைப் பேசலாமா வேண்டாமா என்று பலதடவை சிந்த்தித்த பின்னர் இந்த பகுதியை எழுதுகின்றேன் . கணனித்துறையின் விஞ்ஞானமானியும், முகாமைத்துவ முதுமானியும் எனக்கான கல்வித் தகைமைகளாக கொண்டுள்ள ஊடகவியலாளன் என்பதில் பெருமையடைபவன். இது தற்புகழ்சியாக சிலவேளை சித்தரிக்கப்படலாம் ஆனால் ஊடகத்துறையில் முழுநேரமாக இயங்கி வரும் நான் இந்த அடைவு மட்டங்களை எட்டியமை பெருமைப் படக் கூடிதென்றே கருதுகின்றேன். நான் சார்நதுள்ள ஊடகத்துறையில் கலாநிதி பட்டம் பெற வெண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு. அதற்கான முன்முனைப்புகளை தற்போது​மேற்கொண்டு வருகின்றேன்.இதனை நான் இங்கு பதவி செய்வதன் நோக்கம் என்னை பற்றி பெருமை பேசுவதற்கல்ல மாறாக ஊடகத் துறையில் இயங்குபவர்கள் உயர் கல்வி தகைமைகளை அடைய வேண்டும் அதன் ஊடாக இலங்கையின் தமிழ் ஊடகத்துறை தனது நிலையை உயர்த்த வேண்டும் எனும் ஆசைவெளிப்பாடே. என்னுடன் நெருங்கி பழகி வரும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் இதனை நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன்.

தற்போது நான் எம்.ரி.வி நிறுவனத்தின் நவீன ஊடகப் பிரிவின் முகாமையாளராக செயற்பட்டு வருகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை எனது சிற்றறிவிற்கு எட்டியவரை நவீன ஊடகத்திற்கான தனியான பிரிவினை முதலில் ஆரம்பித்துள்ள நிறுவனம் எம்.ரி.வியாகவே இருக்க வேண்டும். ஊடகத்துறையின் எதிர்காலம் நவீன் ஊடக செயற்பாடுகளால் அதிகம் செல்வாக்கு செலுத்தப்படும் என்பதை முன்னுணர்ந்தமையால் எமது நிறுவனத்தின் தலைமை இதனை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருந்தது. இணைய வழி ஊடகச் செயற்பாடுகள் , சமூக வலைத்தளங்கள், செல்லிடப் பேசிகளின் ஊடான செய்திப் பரிமாற்றம் என இந்த துறையின் பரப்பு தொடர்ந்தும் விசாலித்து வருகின்றது. தினமும் நடைபெறும் மாற்றங்களை கவனிப்பதும் அதன் தாக்கங்கள் எதிர்காலப் போக்ககுகள் குறித்து ஆராய்வதுமாக எனது பணி சவால்மிக்கதாகவே தொடர்கின்றது.

சிலர் வானொலி அறிவிப்பாளானக நான் தொடரவில்லை என்பதால் ஊடகத்துறையை விட்டு நான் ஓடி ஒழித்துக்கொண்டதாக கருதலாம் அனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை புரியவைப்பதற்கும் கடந்த 12 வருடங்களாக நான் வெவ்வேறு தளங்களில் ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டே இருக்கின்றேன் என்பதையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே அந்த பதிவின் நோக்கம்.

பதிவுகளாக எழுதிப் பகிர்வதற்கு எராளமன விடயங்கள் இருந்தாலும் தற்போதுள்ள பணிச் சுமை காரணமாக பதிவெழுத முடியாத நிலை இன்னும் தொடர்கின்றது. சமூக ஊடகங்கள் ஊடான சந்தைப்படுத்தல் , நவீன ஊடகத்தின் வளா்ச்சிப் போக்குகள் , சர்வதேச அரசியல் என சில பரப்புகளில் எழுத வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன்.

Comments

maruthamooran said…
ரமணன் சந்திரசேகரமூர்த்தி!

“என்னுடைய மிகமுக்கிய நண்பர்- சக ஊடகவியலாளன்“ என்பதைத் தாண்டி நவீன ஊடகச்சூழலில் அனைத்து நிலைகளிலும் இயங்குகின்ற சகா. திறந்த மனதுடன் தொடர்ந்தும் கருத்துப் பகிர்தல்களில் ஈடுபடுபவர். “புதிய- வளரும்“ ஊடகவியலாளர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணம்!! அட 50 பதிவுகளை எழுத இவ்வளவு காலமா? கொஞ்சம் வலைப்பக்கமும் கவனம் செலுத்துங்கள் ரமணன்!!

மேலுள்ளவை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியவை. ஐயா...! வலைப்பக்கம் கவனம் செலுத்துங்கள் புதிய விடயங்களும்- நல்லதையும்- தேவையையும் பேசுவோம். தொடர்ந்தும் பயணிப்போம்.

வாழ்த்துக்கள் பொஸ்!!
Unknown said…
நீங்க எங்கயோ இருக்கீங்க அண்ணே !!
உங்கள் துறையில் மேலும் முன்னேற
வாழ்த்துக்கள் பாஸ்!
Jana said…
முதலில் உங்கள் ஐம்பதாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் முதலாவது பதிவுக்கும் இதே ஆவலுடன் பின்னூட்டம் இட்டிருந்தேன் நினைவு உள்ளதா?
அடுத்து உங்களை விட இந்த இடத்தில் நான் பெருமைப்பட்டுக்கொள்வது உங்கள் டொக்ரகிறேட்டுக்கான முயற்சிகளையே மிகப்பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றேன் அதற்கு ரமணன்.

'மனிதாபிமான செய்தியிடல் என்பது இங்கு பெரிதும் கவனம் பெறாத பிரிவாகவே காணப்படுகின்றமை கவலைக்குரியது.
நானும் கவனித்துவந்த ஒரு விடயம் இது...
ஊடகத்துறையில் மட்டுமல்ல வலைப்பதிவகளை இடும் இளையவர்கள் பலரும் தங்களுக்கான பிரத்திகமான பட்டமொன்றை பெறவேண்டும் என்பதில் நானும் பல இளையவர்களை அறிவுறுத்தியே வருகின்றேன் ரமணன். ஏன் என்றால் கருத்து மரண்பாடுடைய சிலரைக்கூட வேறு சிலர் இந்தவிடையத்தில் ஏளனம் செய்வதை நான் பல சந்தர்ப்பங்களிலும் கண்டித்திருக்கின்றேன். ஆனால் எளனம் செய்பவர்கள் அவர்களுக்கு உற்றவர்களாகவும் நான் வேண்டாதவனாகவும் ஆன சந்தர்ப்பங்களும் நிறையவே இந்த விடயத்தில் இடம்பெற்றுள்ளது. அது வேறு கதை.
Jana said…
ரமணன் ஊடகத்துறையில் இருக்கும் சில வேண்டாத நடவடிக்கைகள் பற்றி, சமூக மற்றும் நிதிசார் துறையில் உள்ள நான் சில அபிப்பிராயங்களை கொண்டிருந்தாலும், வேறு துறையில் இரந்து அதை தெரிவிக்கமுடியாது என்றே எப்பொதும் அது பற்றி பேசியதில்லை ஆனால் பல என் எண்ணங்களை ஊடகத்துறைசார்ந்த நீங்கள் தெரிவித்துள்ளமை மனதுக்குள் திருப்தியாகவே உள்ளது.

மீண்டும் ' எண்ணியது யாவும், ஏண்ணியதைவிட சிறப்பாக நிறைவேண்டும்' என உங்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
வாழத்துக்களும் பாராட்டுக்களும்.

என் வேண்டுகொள் இது சார்...
நீண்ட இடைவெளிகள் வராது அப்பப்போ பதிவகளை தாருங்கள்.
அளைவரிடமும் எப்பொதும் நான் கேட்டுக்கொள்வதுபோல சமகால உலக விடையங்கள் பற்றிய பார்வைகளை தமிழில் பதிவாக தாருங்கள்
நன்றி.
இனிய இரவு வணக்கம் ரமணன் அண்ணா,
ஊடகத் துறையில் நீண்ட கால அனுபவம் உடைய உங்களுக்கு இச் சிறியேனின் சிரம் தாழ்த்திய வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் பயணியுங்கள்!
வாழ்த்துக்கள் ரமணன் அண்ணா! இந்த 50 பதிவு இன்னும் நீளனும் உங்களின் நேற்றை காற்றை அன்று கேட்டது இன்னும் குரல் என் செவிகளில் காலமாற்றத்தில் நீங்களும் தடம்  கடந்துவிட்டீர்கள் என என்னியிருந்தேன் இப்போது உணர்கின்றேன் உங்கள் பிடிமாணத்தை!
சமயங்களில் நல்ல சூரியபார்வையைப் போல் நல்ல பதிவை தாருங்கள் செவிமடுக்க முடியாவிட்டாலும் வாசிக்கலாம்! 
KANA VARO said…
நான்காவது வருடத்தில் 50ஆவது பதிவு. வாழ்த்துக்கள்.

நீங்கள் ஊடகத்துறையை விட்டு மட்டுமல்ல பதிவுலகை விட்டும் ஓடி ஒழியவில்லை என்பதை உங்களின் இந்த மீள் வருகை உறுதிப்படுத்துகின்றது.

வானொலி நேயர்கள், வானொலிகளில் உங்கள் குரலைக் கேட்காதவிடத்து உங்களை மறந்திருப்பார்கள். ஆனால் ஊடகம் சார்ந்தவர்கள் “ரமணன் எங்கு, என்ன செய்கின்றார்” என்பதை அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தப் பதிவின் மூலம் எல்லோரது சந்தேகங்களும் தீர்ந்திருக்கும்.

ஊடகத்துறை என்றால் அது அறிவிப்பாளர் (வானொலி), நிகழ்ச்சித் தொகுப்பாளர் (தொலைக்காட்சி) என மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சாதாரண மக்களிடம் அதன் மாயையை உடைத்தெறிந்து ஊடகத்தின் பல்வேறு பகுதிகளையும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களைப் போன்ற பொறுப்பான ஊடகவியலாளர்களின் கடமை.

தொழில்நுட்ப உதவியாளராக ஒரு வானொலியினுள் (சீடி போடுபவர்) நுழைந்த ஒருவர் தனது கடும் உழைப்பினாலும், தேடல்களினாலும் இன்று அந்த வானொலியிலேயே செய்தி ஆசிரியராக இருக்கிறார். (பெயர் முக்கியமில்லை). அறிவிப்பாளர் கனவுகளுடன் நொந்து நூலாகும் இளம் பராயத்தினரை ஊடகங்களினுள் உள்வாங்கி அவர்களை பல்வேறு துறைகளில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.

படித்தவர்களும், பண்பானவர்களும் ஊடகங்களினுள் அதிகரிக்கும் போது அத்துறைக்கான மவுசும் அதிகரிக்கும். சம்பளமும் கூடும். (ஹீ ஹீ இந்த சம்பள பிரச்சினையாலை தானே நான் லண்டன் வரை வந்து நிக்கிறன்)
KANA VARO said…
அப்புறம் நம்ம வியாசா கல்யாணசுந்தரம்.

சார் சௌக்கியமா இருக்காரா? கடந்த 2009ஆம் ஆண்டு அவரிடம் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் கல்வி கற்றேன். அவர், சதீஸ் கிருஸ்ணபிள்ளை (இ.ஒ.கூ) போன்றோரின் கைகளால் நாங்கள் ஊடவியலை கற்று வெளிவந்தால் நிச்சயம் எங்கள் வாழ்வு மேம்படும்.
உங்களால் புதிய பணியும், புதிய பணியால் நீங்களும் மேன்மைபெற வாழ்த்துக்கள்.
Ramanan said…
நன்றி மரருதமூரான் உங்கள் வருகைக்கும் இடுகைக்கும்

//ஐயா...! வலைப்பக்கம் கவனம் செலுத்துங்கள் புதிய விடயங்களும்- நல்லதையும்- தேவையையும் பேசுவோம். தொடர்ந்தும் பயணிப்போம்.

நிச்சயமாக பேசுவதற்கும் கவனம் செலுத்தவதற்கும் நிறையவே விடயங்கள் இருக்கின்றன. இன்று உரிய கவனிப்பை அவை பெறத்தவறினாலும் எதிர்காலத்தில் நிச்சியம் அவை கவனிக்கப்படும் என்பதால் தொடர்வோம்.
Ramanan said…
நன்றி ஐனா உங்கள் பின்னூட்டத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் தமிழ் மணத்தின் நட்சத்திரமானதற்கும் வாழ்த்துகளை இங்கும் பதிவு செய்கின்றேன் பதிவுலகில் உங்கள் பயணம் ஆச்சரியப்பட்டத்தக்கது... எனக்கு உந்து சக்தியாகவும் அமைந்தது. உங்களைப் போன்றவர்கள் பதிவுகளில் காட்டும் அக்கறை நிச்சயம் புதியவர்களுக்கு உந்து சக்தியாக அமையும் என்பது நம்பிக்கை

// ஆனால் எளனம் செய்பவர்கள் அவர்களுக்கு உற்றவர்களாகவும் நான் வேண்டாதவனாகவும் ஆன சந்தர்ப்பங்களும் நிறையவே இந்த விடயத்தில் இடம்பெற்றுள்ளது. அது வேறு கதை //

உண்மையான அக்கறையாளர்களை காலம் தான் அடையாளம் காட்ட வேண்டும் எம்மை சுற்றி நின்று ஆலவட்டம் பிடிப்பவர்கள் தமது காரியம் முடிந்தவுடன் கைகழுவி சென்று விடுவார்கள். இதில் ஏழனம் செய்வதற்கு ஒன்றும் இல்லை முடியாததென்று எதுவுமில்லை எனக் கொண்டால் எல்லாமே சாத்தியமாகும்.

நான் திருமணமாகும் போது முழு நேர வேலையோ கல்வித் தகைமையோ இல்லை அதன் பின்னர் தான் என்னை நானே கட்டமைத்துக் கொண்டேன் . அது எத்தனை சிரமமானது என்பதை அனுவசாலிகள் அத்தனை சிரமங்களை இளையவர்கள் எதிர்நோக்க வேண்டியதில்லை. அத்துடன் கல்வி தகைமை தரும் அந்தஸ்தை வேறு எதனுடனும் ஒப்பிட்ட முடியாதது என்பது எனது அனுபவம் அதனை மற்றவர்களும் பெற வேண்டும் என்பது எனது அவா அவ்வளவு தான். நன்றி ஐனா
Ramanan said…
நிரூபன், தனிமரம் மற்றும் அம்பலத்தார் உங்கள் வருகைக்கும் வாழத்துகளுக்கும் நன்றி
Ramanan said…
வரோ உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி உங்கள் கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் உங்கள் குருநாதர் நலமே உள்ளார் உங்கள் அன்பை அவரிடம் பகிர்ந்து கொள்கின்றேன்
ரமண்ன் அண்ணா இந்தப்பதிவு கடந்த வருடத்தில் பதிவிடப்பட்டிருந்தாலும் என்னால் இன்று தான் பார்க்கமுடிந்தது. ஊடகத்துறையில் சிறப்புடன் செயற்பட நினைக்கும் ஒருவருக்கு உங்களது அனுபவமும். அறிவுரையும் பயன்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வட்டங்களுக்குள் நின்று தம்மை கட்டுப் போட்டு வைத்திருக்கும் ஊடகக்காரர்கள் தாம் இத்துறையில் ஜாம்பவான்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் உங்களைப் பொன்றவர்களின் வெளிப்படுத்தல்கள் அவர்களையும் செதுக்கிவிடலாம்.

கற்றுக்கொண்டே இருக்கும் ஒரு துறையில் நாம் இருக்கிறோம். ஆனால் கற்கமுடியாத சூழல் தமிழ் ஊடக நிறுவனங்களாலும், அங்கிருக்கும் தலைமைகளாலும் ஏற்படும் போதுதான் வெட்டுக்கத்துக்களின் வலி தெரிகிறது.
கற்றுக்கொண்டே வளர நினைக்கும் ஊடகத்துறையை வாழ்க்கையான கொண்டு இருக்க நினைப்பவர்கள் ஒருசிலரே வெளியில் வருகின்றனர். அவர்கள் நிறையவும் போராட்டங்களையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தப் பொராட்டங்களில் வெற்றி பெறுபவர்களே ஊடகவியலில் நிலைத்திருக்க முடியும். அதுவும் தமிழ் ஊடகத்துறையில்.!

அதிரன்.

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...